Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பொன்னை விரும்பிய

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தன்ன தனந்தன - தனதான

வரிகள்

பொன்னை விரும்பிய -பொதுமாதர்

புன்மை விரும்பியெ - தடுமாறும்

என்னை விரும்பிநி - யொருகால்நின்

எண்ணி விரும்பவு - மருள்வாயே

மின்னை விரும்பிய - சடையாளர்

மெய்யின் விரும்பிய - குருநாதா

அன்னை விரும்பிய - குறமானை

அண்மி விரும்பிய - பெருமாளே.

பதம் பிரித்தது

பொன்னை விரும்பிய பொதுமாதர்

புன்மை விரும்பியெ தடுமாறும்

என்னை விரும்பி நி யொருகால்

நின்(னை) எண்ணி விரும்பவும் அருள்வாயே

மின்னை விரும்பிய சடையாளர்

மெய்யின் விரும்பிய குருநாதா

அன்னை விரும்பிய குறமானை

அண்மி விரும்பிய பெருமாளே.

பொருளுரை

தங்கத்தை நாடி விரும்புகின்ற விலைமாதர்களின் இழிவான குணத்தையே விரும்பித் தடுமாறுகின்ற (போதிலும்) என்னை விரும்பி நீ ஒரு முறையேனும் உன்னை தியானித்து நான் விரும்புமாறு அருள் புரிவாயாக. மின்னலைப்போல் ஒளி வீசும் செஞ்சடைப் பெருமானாகிய சிவபிரான் உண்மைப் பொருளை விரும்பி நிற்க, அவருக்கு உபதேசம் செய்த குருநாதனே, உமையன்னை விரும்பிய குறமான் வள்ளியை நெருங்கி விருப்பம் கொண்ட பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்