Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பிறவியலை

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தனதனன தாத்தனத் - தனதான

வரிகள்

பிறவியலை யாற்றினிற் - புகுதாதே

பிரகிருதி மார்க்கமுற் - றலையாதே

உறுதிகுரு வாக்கியப் - பொருளாலே

உனதுபத காட்சியைத் - தருவாயே

அறுசமய சாத்திரப் - பொருளோனே

அறிவுளறி வார்க்குணக் - கடலோனே

குறுமுனிவ னேத்துமுத் - தமிழோனே

குமரகுரு கார்த்திகைப் - பெருமாளே.

பதம் பிரித்தது

பிறவியலை யாற்றினிற் புகுதாதே

பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே

உறுதிகுரு வாக்கியப் பொருளாலே

உனதுபத காட்சியைத் தருவாயே

அறுசமய சாத்திரப் பொருளோனே

அறிவுளறி வார்க்குணக் கடலோனே

குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே

குமரகுரு கார்த்திகைப் பெருமாளே.

பொருளுரை

பிறவி என்ற அலைகள் வீசும் ஆற்றுவெள்ளத்தில் மீண்டும் புகாமல் இருக்க, இயற்கை செலுத்தும் வழியில் சென்று இஷ்டப்படி திரியாமல் இருக்க, உறுதியான குருவின் உபதேச மொழியின் உண்மைப் பொருளைத் தந்து, உனது திருவடிகளின் தரிசனத்தை அருள்வாயாக. ஆறு சமயங்களின் சாத்திரங்களுடைய சாரமாய் நிற்பவனே, தம் அறிவிலே உன்னை அறிந்தவர்களுக்கு நற்குண சமுத்திரமானவனே, குறுமுனி அகத்தியர் புகழும் முத்தமிழ் வித்தகனே, குமர குருவே, கார்த்திகைப் பெண்களின் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்