திருப்புகழ் : பரவைக்கு எத்தனை
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தத்தத் தனான - தனதான
வரிகள்
பரவைக் கெத்தனை - விசைதூது
பகரற் குற்றவ - ரெனமாணுன்
மரபுக் குச்சித - ப்ரபுவாக
வரமெத் தத்தர - வருவாயே
கரடக் கற்பக - னிளையோனே
கலைவிற் கட்குற - மகள்கேள்வா
அரனுக் குற்றது - புகல்வோனே
அயனைக் குட்டிய - பெருமாளே.
பதம் பிரித்தது
பரவைக்கு எத்தனை விசைதூது
பகரற்கு உற்றவர் என மாண்
உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக
வரம் மெத்தத் தர வருவாயே
கரடக் கற்பகன் இளையோனே
கலைவிற் கட்குற மகள்கேள்வா
அரனுக்கு உற்றது புகல்வோனே
அயனைக் குட்டிய பெருமாளே.
பொருளுரை
(அடியார் சுந்தரருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது போய் சொல்வதற்கு உடன்பட்டவர் இவர் (அதாவது இந்த முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற உனது குலத்துக்கு ஏற்ற தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி, வரங்களை எனக்கு நிரம்பத் தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக. மதம்பாயும் சுவட்டை உடைய யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே, மான் போன்றும் வில் போன்றும் கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே, சிவபிரானுக்கு அழிவில்லா உண்மைப் பொருளை உபதேசித்தவனே, பிரமனைக் கைகளால் குட்டின பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!