Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பட்டுப் படாத

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தத்தத் தனான - தனதான

வரிகள்

பட்டுப் படாத - மதனாலும்

பக்கத்து மாதர் - வசையாலும்

சுட்டுச் சுடாத - நிலவாலும்

துக்கத்தி லாழ்வ - தியல்போதான்

தட்டுப் படாத - திறல்வீரா

தர்க்கித்த சூரர் - குலகாலா

மட்டுப் படாத - மயிலோனே

மற்றொப்பி லாத - பெருமாளே.

பதம் பிரித்தது

பட்டுப் படாத மதனாலும்

பக்கத்து மாதர் வசையாலும்

சுட்டுச் சுடாத நிலவாலும்

துக்கத்தில் ஆழ்வது இயல்போதான்

தட்டுப் படாத திறல்வீரா

தர்க்கித்த சூரர் குலகாலா

மட்டுப் படாத மயிலோனே

மற்றொப்பி லாத பெருமாளே.

பொருளுரை

என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்