திருப்புகழ் : நாளு மிகுத்த
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தான தனத்த - தனதான
வரிகள்
நாளு மிகுத்த - கசிவாகி
ஞான நிருத்த - மதைநாடும்
ஏழை தனக்கு - மநுபூதி
ராசி தழைக்க - அருள்வாயே
பூளை யெருக்கு - மதிநாக
பூண ரளித்த - சிறியோனே
வேளை தனக்கு - சிதமாக
வேழ மழைத்த - பெருமாளே.
பதம் பிரித்தது
நாளு மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தம் அதைநாடும்
ஏழை தனக்கும் அநுபூதி
ராசி தழைக்க அருள்வாயே
பூளை யெருக்கு மதிநாக
பூண ரளித்த சிறியோனே
வேளை தனக்கு உசிதமாக
வேழ மழைத்த பெருமாளே.
பொருளுரை
நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக. பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே, உனக்கு வேண்டிய சமயத்தில் சமயோசிதமாக யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!