திருப்புகழ் : ஒருபொழுதும் இருசரண
திருத்தலம் : பழநி
சந்தம்
தனதனன தனதனன தானத் தானத் - தனதான
தனதனன தனதனன தானத் தானத் - தனதான
வரிகள்
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் - துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் - தறியேனே
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் - குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் - தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் - பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் - பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் - பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் - பெருமாளே.
பதம் பிரித்தது
ஒருபொழுதும்
இருசரண
நேசத் தேவைத்து
உணரேனே
உனது பழநி மலையெனும் ஊரை
சேவித் தறியேனே
பெருபுவியில் உயர்வரிய
வாழ்வைத் தீரக்
குறியேனே
பிறவியற நினைகுவன்
என்ஆசைப் பாடைத் தவிரேனோ
துரிதமிடு
நிருதர்புர
சூறைக் காரப் பெருமாளே
தொழுதுவழி படுமடியர்
காவற் காரப் பெருமாளே
விருதுகவி விதரண
விநோதக் காரப் பெருமாளே
விறன் மறவர் சிறுமி
திருவேளைக் காரப் பெருமாளே.
பொருளுரை
ஒரு வேளை கூட உனது இரண்டு திருவடிகளிலும் அன்பையே வைத்து அறிய மாட்டேன். உன் பழநிமலை என்னும் பதியினை வணங்கி அறியமாட்டேன். இப்பெரிய பூமியில் உயர்ந்ததும், அருமையானதுமான வாழ்க்கையை முற்றுமாக யான் குறிக்கொள்ளவில்லை. (இவ்வளவு குறைகளிருந்தும்) பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன். என் ஆசைப்பாடுகளை ஒழிக்க மாட்டேனோ? பாவத் தொழில்களையே செய்யும் அசுரர்களின் ஊர்களை சூறாவளி போல் வீசியடித்த பெருமாளே, உனை வணங்கி வழிபடுகின்ற அடியார்களுக்கு காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே, வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய அற்புத மூர்த்தியாகிய (ஞானசம்பந்தப்) பெருமாளே, வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு தக்க சமயத்தில் காவலாயிருந்த பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!