Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : தேன் இயல் சொற்

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தானதனத் - தனதான

வரிகள்

தேனியல்சொற் - கணிமாதர்

சேவைதனைக் - கருதாதே

யானெனதற் - றிடுபோதம்

யானறிதற் - கருள்வாயே

வானவருக் - கரசான

வாசவனுக் - கினியோனே

ஆனைமுகற் - கிளையோனே

ஆறுமுகப் - பெருமாளே.

பதம் பிரித்தது

தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே

யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே

வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே

ஆனை முகற்கு இளையோனே

ஆறு முகப் பெருமாளே.

பொருளுரை

தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது, யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும் நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக. விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே, யானை முகமுடைய கணபதிக்குத் தம்பியே, ஆறு முகமுடைய பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்