திருப்புகழ் : துள்ளு மதவேள்
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தய்யதன தானத் - தனதான
வரிகள்
துள்ளுமத வேள்கைக் - கணையாலே
தொல்லைநெடு நீலக் - கடலாலே
மெள்ளவரு சோலைக் - குயிலாலே
மெய்யுருகு மானைத் - தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் - தெளிவோனே
செய்யகும ரேசத் - திறலோனே
வள்ளல்தொழு ஞானக் - கழலோனே
வள்ளிமண வாளப் - பெருமாளே.
பதம் பிரித்தது
துள்ளுமத வேள் கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானை தழுவாயே
தெள்ளுதமிழ் பாட தெளிவோனே
செய்யகும ரேச திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.
பொருளுரை
செருக்குடன் வரும் மன்மத வேளின் கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும், நீண்ட துன்பத்தைத் தரும் நீலநிறக் கடலாலும், மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்) சோலையிலுள்ள குயிலினாலும், காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை அணைத்துக் கொள்ள மாட்டாயா? இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே, செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற பராக்கிரமசாலியே, வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடையவனே, வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!