திருப்புகழ் : தீது உற்றே எழு
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தானத் தானன - தந்ததான
வரிகள்
தீதுற் றேயெழு - திங்களாலே
தீயைத் தூவிய - தென்றலாலே
போதுற் றாடும - நங்கனாலே
போதப் பேதைந - லங்கலாமோ
வேதத் தோனைமு - னிந்தகோவே
வேடப் பாவைவி - ரும்புமார்பா
ஓதச் சூதமெ - றிந்தவேலா
ஊமைத் தேவர்கள் - தம்பிரானே.
பதம் பிரித்தது
தீது உற்றே எழு(ம்) திங்களாலே
தீயைத் தூவிய தென்றலாலே
போது உற்று ஆடும் அனங்கனாலே
போதப் பேதை நலங்கலாமோ
வேதத்தோனை முனிந்த கோவே
வேடப் பாவை விரும்பும் மார்பா
ஓதச் சூதம் எறிந்த வேலா
ஊமைத் தேவர்கள் தம்பிரானே.
பொருளுரை
இடையூறு செய்யவே எழுகின்ற சந்திரனாலும், நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றல் காற்றாலும், தனது மலர்ப் பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும், அறிவுள்ள என் பெண் துயர் உறலாமோ? வேத நாயகனாகிய பிரமனை கோபித்த தலைவனே, வேடுவர் மகளான வள்ளி விரும்புகின்ற திரு மார்பனே, கடலிடையே இருந்த மாமரத்தை (சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே, (வல்லவனாகிய உன் முன்னே) வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!