திருப்புகழ் : சருவிய சாத்திர
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தனதன தாத்தனத் - தனதான
வரிகள்
சருவிய சாத்திரத் - திரளான
சடுதிக ழாஸ்பதத் - தமையாத
அருமறை யாற்பெறற் - கரிதாய
அனிதய வார்த்தையைப் - பெறுவேனோ
நிருதரை மூக்கறுத் - தெழுபார
நெடுதிரை யார்ப்பெழப் - பொருதோனே
பொருளடி யாற்பெறக் - கவிபாடும்
புலவரு சாத்துணைப் - பெருமாளே.
பதம் பிரித்தது
சருவிய சாத்திரத் திரளான
சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத
அருமறையாற் பெறற்கு அரிதாய
அனிதய வார்த்தையைப் பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்து
எழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே
பொருள் அடியாற் பெறக் கவிபாடும்
புலவர் உசாத்துணைப் பெருமாளே.
பொருளுரை
அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது. ஆறு என்று விளங்குகின்ற ஆதாரங்களில் பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா? அரக்கர்களை அவமானம் செய்து, ஏழு பெரிய கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போர் செய்தவனே, உண்மைப் பொருளை உன் திருவடித் துணையால் பெறுவதற்காக பாடல்களைப் பாடும் புலவர்களுக்கு உற்ற துணைவனான பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!