Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : கோடான மேருமலை

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தானான தானதனத் - தனதான

வரிகள்

கோடான மேருமலைத் - தனமானார்

கோமாள மானவலைக் - குழலாதே

நாடோறு மேன்மைபடைத் - திடவேதான்

நாயேனை யாளநினைத் - திடொணாதோ

ஈடேற ஞானமுரைத் - தருள்வோனே

ஈராறு தோள்கள்படைத் - திடுவோனே

மாடேறு மீசர்தமக் - கினியோனே

மாதானை யாறுமுகப் - பெருமாளே.

பதம் பிரித்தது

கோடு ஆன மேரு மலைத் தனம் மானார்

கோமாளம் ஆனவலைக்கு உழலாதே

நாள் தோறும் மேன்மை படைத்திடவே தான்

நாயேனை ஆள நினைத்திட ஒணாதோ

ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே

ஈராறு தோள்கள் படைத்திடுவோனே

மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே

மா தானை ஆறு முகப் பெருமாளே.

பொருளுரை

சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல், நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ? நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே, பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே, ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே, சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்