Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : கொடிய மதவேள்

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தனதனன தானத் - தனதான

வரிகள்

கொடியமத வேள்கைக் - கணையாலே

குரைகணெடு நீலக் - கடலாலே

நெடியபுகழ் சோலைக் - குயிலாலே

நிலைமைகெடு மானைத் - தழுவாயே

கடியரவு பூணர்க் - கினியோனே

கலைகள்தெரி மாமெய்ப் - புலவோனே

அடியவர்கள் நேசத் - துறைவேலா

அறுமுகவி நோதப் - பெருமாளே.

பதம் பிரித்தது

கொடியமத வேள்கைக் கணையாலே

குரைகண் நெடு நீலக் கடலாலே

நெடியபுகழ் சோலைக் குயிலாலே

நிலைமைகெடு மானைத் தழுவாயே

கடியரவு பூணர்க்கு இனியோனே

கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே

அடியவர்கள் நேசத்து உறைவேலா

அறுமுக விநோதப் பெருமாளே.

பொருளுரை

கொடுமை செய்யும் மன்மதனுடைய கரத்திலிருந்து விடும் மலர் அம்புகளாலே, அலை ஓசை மிகுந்து ஆரவாரிக்கும் பெரிய நீலக் கடலினாலே, நீண்டுயர்ந்த சோலையில் பாடிப் புகழ் பெற்ற குயிலினாலே, (உன்னைப் பிரிந்து) தன்னிலைமை கெட்டு நிலைகுலையும் மானொத்த இப்பெண்ணைத் தழுவமாட்டாயா? கடிக்கும் பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவனாருக்கு இனியவனே, ஆய கலைகள் அனைத்தையும் தெரிந்த உண்மை வித்தகனே, உன் அடியார்களின் பக்தியில் வாழ்கின்ற வேலனே, ஆறுமுகனே, திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்