Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : உலகபசு பாச

திருத்தலம் : பழநி

சந்தம்

தனதனன தான தந்த - தனதான

தனதனன தான தந்த - தனதான

வரிகள்

உலகபசு பாச தொந்த - மதுவான

உறவுகிளை தாயர் தந்தை - மனைபாலர்

மலசலசு வாச சஞ்ச - லமதாலென்

மதிநிலைகெ டாம லுன்ற - னருள்தாராய்

சலமறுகு பூளை தும்பை - யணிசேயே

சரவணப வாமு குந்தன் - மருகோனே

பலகலைசி வாக மங்கள் - பயில்வோனே

பழநிமலை வாழ வந்த - பெருமாளே.

பதம் பிரித்தது

உலகபசு பாச தொந்தம் அதுவான

உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்

மலசல சுவாச சஞ்சலம் அதால் என்

மதிநிலை கெடாமல் உன்றன் அருள்தாராய்

சலம் அறுகு பூளை தும்பை அணிசேயே

சரவணபவா முகுந்தன் மருகோனே

பலகலை சிவாகமங்கள் பயில்வோனே

பழநிமலை வாழ வந்த பெருமாளே.

பொருளுரை

உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக. கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே, சரவணபவனே, திருமாலின் மருமகனே, பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே, பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்