Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : இத்தரணி மீதில்

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தத்ததன தானத் - தனதான

வரிகள்

இத்தரணி மீதிற் - பிறவாதே

எத்தரொடு கூடிக் - கலவாதே

முத்தமிழை யோதித் - தளராதே

முத்தியடி யேனுக் - கருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக் - குருநாதா

சத்தசொரு பாபுத் - தமுதோனே

நித்தியக்ரு தாநற் - பெருவாழ்வே

நிர்த்தஜெக ஜோதிப் - பெருமாளே.

பதம் பிரித்தது

இத்தரணி மீதிற் பிறவாதே

எத்தரொடு கூடிக் கலவாதே

முத்தமிழை யோதித் தளராதே

முத்தி அடியேனுக்கு அருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா

சத்தசொருபா

புத்தமுதோனே

நித்தியக்ருதா

நற் பெருவாழ்வே

நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.

பொருளுரை

இந்தப் பூமியில் பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக் கலந்து கொள்ளாமலும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும், முக்திநிலையை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன். உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே, ஒலி (சப்தம்) வடிவிலே திகழ்பவனே, புதிய அமிர்தம் போன்றவனே, தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே, என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே, ஆடல் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்