திருப்புகழ் : தவநெறி
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தனதன தனதன தனதன தனதன தனதன - தனதான
வரிகள்
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய - பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு - சருவாநின்
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது - வெனுமாறற்
றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு - முணர்வேனோ
குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட - வுரகேசன்
கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் - வறிதாகத்
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி - சரர்சேனை
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல - பெருமாளே.
பதம் பிரித்தது
தவநெறி தவறிய குருடுகள்
தலைபறி கதறிய பரபாதத் தருமிகள்
கருமிகள் வெகுவித சமயிகள்
அவரொடு சருவாநின்று
அவன் இவன்உவன் உடன் அவள் இவள் உவள்
அது இது உது எனுமாறற்று
அரு உரு ஒழிதரு உருவுடை
அதுபதி தமியனும் உணர்வேனோ
குவலய முழுவதும் மதிர்பட வடகுவடு இடிபட
உரகேசன் கொடுமுடி பலநெரிதர
நெடு முதுகுரை கடல்புனல் வறிதாக
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட
நிசி சரர்சேனை துகளெழ
நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.
பொருளுரை
தவவழியை விட்டு விலகின குருடர்கள், தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள், தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள், ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்றேன். அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும், அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும், உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ? உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட, சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட, நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக, அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க, அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ, நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!