திருப்புகழ் : இசைந்த ஏறும்
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தனந்த தானந் தனதன தானன - தனதான
வரிகள்
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் - எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையு - மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு - முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய - குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற - முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் - நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் - வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய - பெருமாளே.
பதம் பிரித்தது
இசைந்த ஏறும்
கரியுரி போர்வையும்
எழில்நீறும்
இலங்கு நூலும்
புலியத ளாடையும்
மழுமானும்
அசைந்த தோடும்
சிரமணி மாலையும்
முடிமீதே அணிந்த ஈசன்
பரிவுடன் மேவிய குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே
அசந்த போதென் துயர்கெட
மாமயில் வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
பொருளுரை
விருப்பமுடன் ஏறுகின்ற ரிஷப வாகனமும், கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், அழகிய திருநீறும், விளங்குகின்ற பூணூலும், புலித்தோல் ஆடையும், கோடரியும், மானும், காதுகளில் அசைந்தாடும் தோடுகளும், சடையிலே தரித்த அழகிய கொன்றை மாலையும், தலைமுடி மீது அணிந்த ஈசனாம் சிவபெருமான் பரிவோடு போற்றிப் பரவிய குருநாதனே, கர்வம் மிக்க சூரன் தன் சுற்றத்தாருடன் வேரற்றுப் போகும்படி கோபித்தவனே, விருப்போடு பாசக்கயிறை எடுத்து வந்த யமதூதர்கள் சோர்வு அடையாமல் என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும். அழகிய வேலினை தோளில் வைத்திருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!