Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : இருந்த வீடும்

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தனந்த தானந் தந்தன தனதன - தனதான

வரிகள்

இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு - முறுகேளும்

இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் - வளமேவும்

விரிந்த நாடுங் குன்றமு நிலையென - மகிழாதே

விளங்கு தீபங் கொண்டுனை வழிபட - அருள்வாயே

குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் - மருகோனே

குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் - மணவாளா

திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு - புலவோனே

சிவந்த காலுந் தண்டையு மழகிய - பெருமாளே.

பதம் பிரித்தது

இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் உறுகேளும்

இசைந்த வூரும் பெண்டிரும் இளமையும்

வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே

விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே

குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே

குரங்குலாவுங் குன்றுறை குறமகள் மணவாளா

திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே

சிவந்த காலுந் தண்டையும் அழகிய பெருமாளே.

பொருளுரை

நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்த மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்