Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பேரவா அறா

திருத்தலம் : பொதுப்பாடல்கள்

சந்தம்

தான தான தானான தானத் - தனதான

வரிகள்

பேர வாவ றாவாய்மை பேசற் - கறியாமே

பேதை மாத ராரோடு கூடிப் - பிணிமேவா

ஆர வார மாறாத நூல்கற் - றடிநாயேன்

ஆவி சாவி யாகாமல் நீசற் - றருள்வாயே

சூர சூர சூராதி சூரர்க் - கெளிவாயா

தோகை யாகு மாரா கிராதக் - கொடிகேள்வா

தீர தீர தீராதி தீரப் - பெரியோனே

தேவ தேவ தேவாதி தேவப் - பெருமாளே.

பதம் பிரித்தது

பேரவா அறாவாய்மை பேசற்கறியாமே

பேதை மாதராரோடு கூடிப் பிணிமேவா

ஆர வார மாறாத நூல்கற்று அடிநாயேன்

ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே

சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா

தோகையா குமாரா கிராதக் கொடிகேள்வா

தீர தீர தீராதி தீரப் பெரியோனே

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

பொருளுரை

பேராசை நீங்காத நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல், அறிவீனர்களாகிய பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து, ஆடம்பரம் நீங்காத சமயக் கூச்சலுக்கு இடம்தரும் நூல்களைப் படித்து அடிமை நாயான எனது உயிர் வீண் படாமல் நீ சிறிது அருள் புரிவாயாக. சூரர்களுக்குச் சூரனான சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே, மயில் வாகனனே, குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே, மகா தீரம் உடையோய், தைரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே, தேவதேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்