திருப்புகழ் : கூறும் மார வேள்
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தான தான தானான தானத் - தனதான
வரிகள்
கூறு மார வேளார வாரக் - கடலாலே
கோப மீது மாறாத கானக் - குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் - பகையாலே
மாது போத மாலாகி வாடத் - தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித் - திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் - கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப் - பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் - பெருமாளே.
பதம் பிரித்தது
கூறும் மார வேள் ஆரவாரக் கடலாலே
கோப மீது மாறாத கானக் குயிலாலே
மாறு போலும் மாதாவின் வார்மைப் பகையாலே
மாது போத மால் ஆகி வாடத் தகுமோதான்
ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே
சீறு சூரர் நீறு ஆக மோதிப் பொரும் வேலா
தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
பொருளுரை
புகழ் பெற்ற மார வேளாகிய மன்மதனாலும், பேரொலி செய்யும் கடலாலும், என் மீது கோபம் நீங்காத, இசை பாடும், குயிலாலும், என் மீது விரோதம் பூண்டவள் போலுள்ள தாயின் நியாயமான பகையாலும், பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு வாடுதல் நியாயமாகுமோ? அழகிய தோகை மயிலின் மேல் ஏறி வீராவேசம் செய்யும் வீரனே, ஏழு உலகங்களும் வாழ்வதற்கு உதவும் சேவற் கொடியோனே, கோபித்து எழுந்த சூரர்கள் பொடியாகும்படி தாக்கி சண்டை செய்த வேலனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!