Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : அருத்தி வாழ்வொடு

திருத்தலம் : பழநி

சந்தம்

தனத்த தானன தனதன தனதன - தனதான

வரிகள்

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு - முறவோரும்

அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு - வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது - நினையாதுன்

தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது - தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக - வுபதேசம்

இசைத்த நாவின இதணுறு குறமக - ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு - தெய்வயானை

பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை - பெருமாளே.

பதம் பிரித்தது

அருத்தி வாழ்வொடு

தனகிய மனைவியும்

உறவோரும் அடுத்த பேர்களும்

இதமுறு மகவோடு

வளநாடும்

தரித்த வூரும்

மெய் எனமன நினைவது

நினையாது உன் த(ன்)னைப் பராவியும்

வழிபடு தொழிலது தருவாயே

எருத்தி லேறிய இறையவர்

செவிபுக வுபதேசம்

இசைத்த நாவின

இதணுறு குறமகள் இருபாதம்

பரித்த சேகர

மகபதி தரவரு தெய்வயானை

பதிக்கொள் ஆறிரு புய

பழநியிலுறை பெருமாளே.

பொருளுரை

ஆசையை விருத்தி செய்கின்ற இந்த வாழ்க்கையில், சரசம் செய்யும் மனைவியும் சுற்றத்தாரும், நண்பர்களும், இன்பம் நல்கும் குழந்தைகளும், வாழ்கின்ற செழிப்பான நாடும், குடிபுகுந்த ஊரும் நிரந்தரம் என்று மனம் நினைக்கும் பொய் எண்ணத்தை நினைக்காமல் உன்னையே நினைத்தும் துதித்தும், வழிபடுகின்றதுமான தொழிலை எனக்கு நீ தர வேண்டும். ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு ஏறிய சிவபெருமானின் செவிக்குள் புகுமாறு வேத மந்திரத்தை உபதேசம் மொழிந்தருளிய இனிய நாவினை உடையவனே, தினைப்புனத்தின் பரணில் இருந்த வள்ளியின் இருபாதங்களையும் தாங்கிய திருமுடியை உடையவனே, தேவேந்திரன் செய்த தவத்தினால் அவதரித்த தேவயானை கணவனாகக் கொண்ட பன்னிரு புயத்தோனே, பழனியில் வாழும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்