திருப்புகழ் : காதி மோதி
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தான தான தானான தானத் - தனதான
வரிகள்
காதி மோதி வாதாடு நூல்கற் - றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் - பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் - குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் - கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் - துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் - குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் - கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் - பெருமாளே.
பதம் பிரித்தது
காதி மோதி வாதாடு நூல்கற்றிடுவோரும்
காசு தேடி யீயாமல் வாழப் பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யென நெக்குருகாரும்
மாறிலாத மாகாலனூர் புக்கலைவாரே
நாத ரூப மாநாதர் ஆகத்து உறைவோனே
நாகலோக மீரேழு பாருக்கு உரியோனே
தீதி லாத வேல்வீர சேவற்கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
பொருளுரை
எதிர்த்துப் பேசியும், தாக்கியும், வாதம் செய்யவல்ல நூல்களைக் கற்றவர்களும், பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடாது வாழ்க்கை நடத்துபவர்களும், பார்வதிபாகன் சிவபிரானது செல்வமே என்று உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும், தர்மநெறி மாறாத பெரும் யமதர்மபுரிக்கு புகுந்து பிறந்து புகுந்து அலைச்சல் உறுவார்கள். இசை உருவத்தோனே, மகாதேவர் சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்போனே, சுவர்க்க லோகம் ஆகிய பதினான்கு உலகங்களுக்கும் உரிமைக்காரனாக விளங்குவோனே, தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே, சேவலைக் கொடியாக உயர்த்தியவனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!