திருப்புகழ் : நீதத்துவமாகி
திருத்தலம் : மதுரை
சந்தம்
தானத் தனதான தானத் - தனதான
வரிகள்
நீதத் துவமாகி நேமத் - துணையாகிப்
பூதத் தயவான போதைத் - தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் - கடலோனே
கோதற் றமுதானே கூடற் - பெருமாளே.
பதம் பிரித்தது
நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் கடலோனே
கோதற்ற அமுதானே கூடற் பெருமாளே.
சொற்கள்
1. நீதத்துவம் - நீதித்தன்மை
2. நேமம் - சீரிய ஒழுக்கம்
3. பூதம் - உயிர்வர்க்கங்கள்
4. தயவான - கருணைசெய்வான்
5. கூடல் - மதுரை
பொருளுரை
நீதித்தன்மை கொண்டதாய், சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் நல்லறிவைத் தந்தருள்வாயாக. ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, ஞான சமுத்திரமே, குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!
முகப்பு பக்கம் செல்லவும்