திருப்புகழ் : தீராப் பிணிதீர
திருத்தலம் : பேரூர்
சந்தம்
தானாத் தனதான தானாத் - தனதான
வரிகள்
தீராப் பிணிதீர சீவாத் - துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் - கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் - கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் - பெருமாளே.
பதம் பிரித்தது
தீராப் பிணி தீர சீவ ஆத்தும ஞான
ஊராட்சி அதான ஓர்வாக்கு அருள்வாயே
பாரோர்கு இறை சேயே பாலாக் கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே.
சொற்கள்
1. பாரோர்கு இறை - சிவபிரான்
2. சேய் - குழந்தை
3. பாலாக் கிரி - குன்று
பொருளுரை
முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்த் தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!