திருப்புகழ் : அபகார நிந்தை
திருத்தலம் : பழநி
சந்தம்
தனதான தந்தனத் - தனதான
தனதான தந்தனத் - தனதான
வரிகள்
அபகார நிந்தைபட் - டுழலாதே
அறியாத வஞ்சரைக் - குறியாதே
உபதேச மந்திரப் - பொருளாலே
உனைநானி னைந்தருட் - பெறுவேனோ
இபமாமு கன்தனக் - கிளையோனே
இமவான்ம டந்தையுத் - தமிபாலா
ஜெபமாலை தந்தசற் - குருநாதா
திருவாவி னன்குடிப் - பெருமாளே.
பதம் பிரித்தது
அபகார நிந்தைபட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக் கிளையோனே
இமவான் மடந்தை உத்தமிபாலா
ஜெபமாலை தந்த சற் குருநாதா
திருவாவினன் குடி பெருமாளே.
பொருளுரை
பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!