திருப்புகழ் : அஞ்சன வேல்விழி மடமாதர்
திருத்தலம் : தஞ்சை
சந்தம்
தந்தன தானன - தனதான
வரிகள்
அஞ்சன வேல்விழி - மடமாதர்
அங்கவர் மாயையி - லலைவேனோ
விஞ்சுறு மாவுன - தடிசேர
விம்பம தாயரு - ளருளாதோ
நஞ்சமு தாவுணு - மரனார்தம்
நல்கும ராவுமை - யருள்பாலா
தஞ்சென வாமடி - யவர்வாழத்
தஞ்சையில் மேவிய - பெருமாளே.
பதம் பிரித்தது
அஞ்சனம் வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில்
அலைவேனோ
விஞ்சுறுமா(று) உனது அடி சேர விம்பம் அதாய் அருள்
அருளாதோ
நஞ்சு அமுதாய் உ(ண்)ணும் அரனார் தம் நல் குமரா உமை
அருள் பாலா
தஞ்ச(ம்) எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய
பெருமாளே.
பொருளுரை
மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!