Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : சூழும்வினை

திருத்தலம் : வேதாரணியம்

சந்தம்

தானன தத்தத் தந்தன தந்தன - தனதான

வரிகள்

சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி - கழிகாமஞ்

சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு - துணையாதே

ஏழையெ னித்துக் கங்களு டன்தின - முழல்வேனோ

ஏதம கற்றிச் செம்பத சிந்தனை - தருவாயே

ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை - யெழுநாளே

ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் - மருகோனே

வேழமு கற்கு தம்பியெ னுந்திரு - முருகோனே

வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் - பெருமாளே.

பதம் பிரித்தது

சூழும்வினைக் கட்டுன்ப

நெடும்பிணி கழிகாமஞ் சோரம் இதற்கு

சிந்தை நினைந்து உறுதுணை யாதே

ஏழையென் இத்துக்கங்களுடன்

தினம் உழல்வேனோ

ஏதம் அகற்றிச் செம்பத

சிந்தனை தருவாயே

ஆழியடைத்து

இலங்கையை யெழுநாளே ஆண்மைசெலுத்தி தன்கைக்

கொண்ட

கரும்புயல் மருகோனே

வேழமுகற்கு தம்பியெனுந் திரு முருகோனே

வேதவனத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.

பொருளுரை

என்னைச் சூழ்ந்த தீவினையின் காரணமாக ஏற்படும் நீண்ட நோய், மிகுந்த காமம், களவு ஆகியவற்றையே மனத்தில் நினைவு கொண்டிருந்தால், எனக்கு வேறு உற்ற துணை யாது? ஏழையேன் ஆகிய யான் இத்தனை துக்கங்களுடன் நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? இந்தக் குற்றத்தினை நீக்கி உன் செம்மையான பாதங்களை சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக. சமுத்திரத்தை அணைகட்டி அடைத்து ஏழு நாளிலே இலங்கையின் மீது தனது ஆண்மையைச் செலுத்தி போரிட்டு தன் கையில் வசமாக்கிய கரிய மேக வண்ணத்து அண்ணல் இராமனின் மருமகனே, யானைமுகத்துக் கணபதியின் தம்பி எனப்படும் திருமுருகனே, வேதாரணியத்தில் அமர்ந்த சிவபிரான் தந்தருளிய பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்