திருப்புகழ் : இறையத்தனையோ
திருத்தலம் : திலதைப்பதி
சந்தம்
தனனத் தனனா - தனதான
வரிகள்
இறையத் தனையோ - அதுதானும்
இலையிட் டுணலேய் - தருகாலம்
அறையிற் பெரிதா - மலமாயை
அலையப் படுமா - றினியாமோ
மறையத் தனைமா - சிறைசாலை
வழியுய்த் துயர்வா - னுறுதேவர்
சிறையைத் தவிரா - விடும்வேலா
திலதைப் பதிவாழ் - பெருமாளே.
பதம் பிரித்தது
இட்டுணல் ஏய்தருகாலம்
இறையத்தனையோ அதுதானும் இலை
அறையிற் பெரிதாம்
மலமாயை அலையப் படுமாறு இனியாமோ
மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து
உயர்வானுறு தேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே.
பொருளுரை
மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம் ஓர் அணு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை. (அந்த நெறி எவ்வளவு இருந்தது என) சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது. மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக் கூடாது. வேதம் கற்ற தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச் செய்து, உயர்ந்த வானிலுள்ள தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே, திலதைப்பதி என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!