திருப்புகழ் : நாட்டம் தங்கி
திருத்தலம் : வேப்பஞ்சந்தி
சந்தம்
தாத்தந் தந்தத் தந்தத் தனனத் - தனதான
வரிகள்
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் - படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் - பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் - படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் - கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் - பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் - தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் - கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் - பெருமாளே.
பதம் பிரித்தது
நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் படியாதே
நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் பதம் ஈவாய்
வாட்டம் கண்டு உற்று அண்டத்து அமரப் படை மீதே
மாற்றம் தந்து பந்திச் சமருக்கு எதிரானோர்
கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா
வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே
வேப்பம் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே.
பொருளுரை
விருப்பத்தை (உன் மீது) தங்க வைத்து, பெண்களின் மார்புக்குவட்டில் கவனம் படியாமல், தங்கள் கருத்தை உன் திருவடியில் நாட்ட வல்ல தொண்டர்களுக்கு தாமரைத் திருவடிகளைத் தந்து அருள் புரிவாய். சோர்வு காணும்படி விண்ணில் உள்ள தேவர்களின் சேனைகள் மீது பகைமை மொழிகளைக் கூறி கூட்டமாக போருக்கு எதிர்த்து வந்த அசுரர்களின் கூட்டமெல்லாம் கெட்டுப் பிரிந்துச் சிதறும்படி சண்டை செய்பவனே, யமனுடைய ஒழுங்கான (நீதி வழுவாத) மனத்தின் பண்பை நிகர்த்து ஒளி வீசும் வேலை உடையவனே, அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே, வேப்பஞ்சந்தி என்னும் ஊரில் உறையும் கந்தனே, குமரப் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!