திருப்புகழ் : வரியார் கருங்கண்
திருத்தலம் : திருச்செந்தூர்
சந்தம்
தனனா தனந்த - தனதான
வரிகள்
வரியார் கருங்கண் - மடமாதர்
மகவா சைதொந்த - மதுவாகி
இருபோ துநைந்து - மெலியாதே
இருதா ளினன்பு - தருவாயே
பரிபா லனஞ்செய் - தருள்வோனே
பரமே சுரன்ற - னருள்பாலா
அரிகே சவன்றன் - மருகோனே
அலைவா யமர்ந்த - பெருமாளே.
பதம் பிரித்தது
வரியார் கருங்கண் மடமாதர்
மகவாசை தொந்தம் அதுவாகி
இருபோது நைந்து மெலியாதே
இருதாளின்அன்பு தருவாயே
பரிபாலனஞ் செய்து அருள்வோனே
பரமேசுரன்தன் அருள்பாலா
அரி கேசவன்தன் மருகோனே
அலைவாய் அமர்ந்த பெருமாளே.
பொருளுரை
வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய கண்களை உடைய இளம்பெண்கள், குழந்தைகள் என்கிற ஆசையாகிய பந்தத்திலே அகப்பட்டு, பகலும் இரவும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல், உன் இரு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருள்வாயாக. காத்து ரட்சித்து அருள் செய்பவனே, பரமசிவன் தந்தருளிய குழந்தையே, ஹரி கேசவனாம் திருமாலின் மருமகனே, திருச்சீரலைவாயாம் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!