திருப்புகழ் : சீத மதியம்
திருத்தலம் : திருவாமூர்
சந்தம்
தான தனன தனத்தந் - தனதான
வரிகள்
சீத மதிய மெறிக்குந் - தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் - சிலையாலே
ஓத மருவி யலைக்குங் - கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் - படியோதான்
மாது புகழை வளர்க்குந் - திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங் - குமரேசா
காத லடியர் கருத்தின் - பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் - பெருமாளே.
பதம் பிரித்தது
சீத மதிய மெறிக்குந் தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் சிலையாலே
ஓத மருவி யலைக்குங் கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் படியோதான்
மாது புகழை வளர்க்குந் திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங் குமரேசா
காத லடியர் கருத்தின் பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.
பொருளுரை
குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும், கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும், அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும், ஊழிக்காலம் போல நீடித்துள்ள இந்த இரவை எப்படி நான் கழிப்பேன்? மாதரசி திலகவதியாரின் புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில் வாழுகின்ற குமரேசனே, மயில் மீது வீற்றிருக்கும் குமரேசனே, அன்புள்ள அடியார்களின் கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே, யமனுடைய முதுகைப் பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!