திருப்புகழ் : அயில் ஒத்து எழும்
திருத்தலம் : திருமயிலை
சந்தம்
தனனத் தனதன - தனதான
வரிகள்
அயிலொத் தெழுமிரு - விழியாலே
அமுதொத் திடுமரு - மொழியாலே
சயிலத் தெழுதுணை - முலையாலே
தடையுற் றடியனு - மடிவேனோ
கயிலைப் பதியரன் - முருகோனே
கடலக் கரைதிரை - யருகேசூழ்
மயிலைப் பதிதனி - லுறைவோனே
மகிமைக் கடியவர் - பெருமாளே.
பதம் பிரித்தது
அயில் ஒத்து எழும் இரு விழியாலே
அமுது ஒத்திடும் அரு மொழியாலே
சயிலத்து எழு துணை முலையாலே
தடையுற்று அடியனு(ம்) மடிவேனோ
கயிலைப் பதி அரன் முருகோனே
கடல் அக் கரை திரையருகே சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே
மகிமைக்கு அடியவர் பெருமாளே.
பொருளுரை
வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ? கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை முருகனே, கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும் திருமயிலைப்பதியில் வீற்றிருப்பவனே, பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!