திருப்புகழ் : மருமல்லி யார்
திருத்தலம் : திருவலிதாயம்
சந்தம்
தனதய்ய தானதன - தனதான
வரிகள்
மருமல்லி யார்குழலின் - மடமாதர்
மருளுள்ளி நாயடிய - னலையாமல்
இருநல்ல வாகுமுன - தடிபேண
இனவல்ல மானமன - தருளாயோ
கருநெல்லி மேனியரி - மருகோனே
கனவள்ளி யார்கணவ - முருகேசா
திருவல்லி தாயமதி - லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் - பெருமாளே.
பதம் பிரித்தது
மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியன்அலையாமல்
இரு நல்லவாகும் உனதடிபேண
இனவல்ல மான மனது அருளாயோ
கருநெல்லி மேனி அரி மருகோனே
கனவள்ளியார்கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.
பொருளுரை
வாசனை வீசும் மல்லிகை மலர் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை காம மயக்கத்தால் நினைந்து நினைந்து அடிநாயேன் அலைவுறாமல், நன்மை நல்கும் உன் இரண்டு திருவடிகளை விரும்பிப் போற்ற தக்கதான பெருமையும் மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ? கருநெல்லிக்காய் போல பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே, பெருமை வாய்ந்த வள்ளி தேவியின் கணவனே, முருகேசா, திருவலிதாயம் என்ற தலத்தில் வீற்றிருப்பவனே, விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!