திருப்புகழ் : சிகரம் அருந்த
திருத்தலம் : மாயாபுரி
சந்தம்
தனன தனந்த தானன - தனதான
தனன தனந்த தானன - தனதான
வரிகள்
சிகர மருந்த வாழ்வது - சிவஞானம்
சிதறி யலைந்து போவது - செயலாசை
மகர நெருங்க வீழ்வது - மகமாய
மருவி நினைந்தி டாவருள் - புரிவாயே
அகர நெருங்கி னாமய - முறவாகி
அவச மொடுங்கை யாறொடு - முனமேகிக்
ககன மிசைந்த சூரியர் - புகமாயை
கருணை பொழிந்து மேவிய - பெருமாளே.
பதம் பிரித்தது
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்
சிதறி யலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்திடா அருள்புரிவாயே
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி
அவசமொடுங் கையாறொடும் முனம் ஏகி
ககனம் இசைந்த சூரியர்
புக கருணை பொழிந்து
மாயை மேவிய பெருமாளே.
பொருளுரை
சிவாயநம என்ற பஞ்சாட்சரத்திலுள்ள சி கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது சிவஞானமாகும். அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும். மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை. உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக. (வீரமஹேந்திரபுரத்தின்) வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு, மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று, ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும் உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம் செய்து) அவர்களுக்குக் கருணை பொழிந்தனையே. மாயாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!