திருப்புகழ் : வேழம் உண்ட
திருத்தலம் : காசி
சந்தம்
தான தந்தன தானன - தனதான
தான தந்தன தானன - தனதான
வரிகள்
வேழ முண்ட விளாகனி - யதுபோல
மேனி கொண்டு வியாபக - மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக - அயர்வாகி
நானு நைந்து விடாதருள் - புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் - கழுவேற
வாதில் வென்ற சிகாமணி - மயில்வீரா
காள கண்ட னுமாபதி - தருபாலா
காசி கங்கையில் மேவிய - பெருமாளே.
பதம் பிரித்தது
வேழ முண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி
நானு நைந்து விடாதருள் புரிவாயே
மாள அன்று அமணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
காசி கங்கையில் மேவிய பெருமாளே.
பொருளுரை
வேழம் என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல உள்ளிருக்கும் சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி, தினமும் அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து, நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக. முன்பு சமணக் குருக்கள் கழுவில் ஏறி இறக்கும்படியாக வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே, விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே, கங்கைநதிக் கரையிலுள்ள காசி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!