திருப்புகழ் : எதிரிலாத பத்தி
திருத்தலம் : கதிர்காமம்
சந்தம்
தனன தான தத்த - தனதான
தனன தான தத்த - தனதான
வரிகள்
எதிரி லாத பத்தி - தனைமேவி
இனிய தாள்நி னைப்பை - யிருபோதும்
இதய வாரி திக்கு - ளுறவாகி
எனது ளேசி றக்க - அருள்வாயே
கதிர காம வெற்பி - லுறைவோனே
கனக மேரு வொத்த - புயவீரா
மதுர வாணி யுற்ற - கழலோனே
வழுதி கூனி மிர்த்த - பெருமாளே.
பதம் பிரித்தது
எதிரிலாத பத்தி தனைமேவி
இனிய தாள்நினைப்பை இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி
எனதுளே சிறக்க அருள்வாயே
கதிர காம வெற்பில் உறைவோனே
கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.
பொருளுரை
சமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக. கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே, பொன் மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே, இனிய மொழிகள் உள்ள ரஸ்வதி வந்து போற்றும் பாதனே, பாண்டியனது கூனை சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!