திருப்புகழ் : அல்லில் நேரும்
திருத்தலம் : வள்ளியூர்
சந்தம்
தய்ய தானன - தனதான
வரிகள்
அல்லில் நேருமி - னதுதானும்
அல்ல தாகிய - உடல்மாயை
கல்லி னேரஅ - வழிதோறுங்
கையு நானுமு - லையலாமோ
சொல்லி நேர்படு - முதுசூரர்
தொய்ய வூர்கெட - விடும்வேலா
வல்லி மாரிரு - புறமாக
வள்ளி யூருறை - பெருமாளே.
பதம் பிரித்தது
அல்லில் நேரும் மின்னதுதானும்
அல்லதாகிய உடல் மாயை
கல்லி னேரஅவ்வழிதோறும்
கையும் நானும் உலையலாமோ
சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே.
பொருளுரை
இரவில் தோன்றும் மின்னல் நிலைக்கும் நேரம்கூட நிலைக்காத இந்த உடல் வெறும் மாயை. கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை வழியில் என் ஒழுக்க நெறியும் அடியேனும் நிலைகுலையலாமோ? தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு எதிர்த்த பெரும்சூரர் அழிய, அவர்கள் ஊர் பாழ்பட செலுத்திய வேலாயுதனே, கொடிபோன்ற தேவிமார் (வள்ளி, தேவயானை) இருபுறமும் ஆக வள்ளியூரில் குடிகொண்ட பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!