திருப்புகழ் : பத்தியால் யானுனை
திருத்தலம் : இரத்னகிரி
சந்தம்
தத்தனா தானனத் - தனதான
தத்தனா தானனத் - தனதான
வரிகள்
பத்தியால் யானுனைப் - பலகாலும்
பற்றியே மாதிருப் - புகழ்பாடி
முத்தனா மாறெனைப் - பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் - கருள்வாயே
உத்தமா தானசற் - குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் - கிரிவாசா
வித்தகா ஞானசத் - திநிபாதா
வெற்றிவே லாயுதப் - பெருமாளே.
பதம் பிரித்தது
பத்தியால் யானுனை பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனாம் ஆறெனை பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே
உத்தம அதான சற் குணர்நேயா
ஒப்பிலா மா மணிக்கிரிவாசா
வித்தகா ஞானசத்தி நிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
பொருளுரை
அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!