திருப்புகழ் : இருவினையின் மதி
திருத்தலம் : சிதம்பரம்
சந்தம்
தனதனன தனன தந்தத் - தனதானா
தனதனன தனன தந்தத் - தனதானா
வரிகள்
இருவினையின் மதிம யங்கித் - திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் - றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் - டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் - கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் - புலவோனே
சிவனருளு முருக செம்பொற் - கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் - கெளியோனே
கனகசபை மருவு கந்தப் - பெருமாளே.
பதம் பிரித்தது
இருவினையின் மதிம யங்கி திரியாதே
எழுநரகில் உழலும் நெஞ்சுற்று அலையாதே
பரமகுரு அருள்நினைந்திட்டு உணர்வாலே
பரவுதரி சனையை என்று எற்கு அருள்வாயே
தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணைநெறி புரியும் அன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
பொருளுரை
நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால் என்னறிவு மயக்கமடைந்து அலைந்து திரியாமல், ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல், சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்? யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக வந்தவனே, சிவபெருமான் பெற்றருளிய முருகனே, செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே, அருள் நெறியை அனுஷ்டிக்கும் உன் அன்பர்க்கு எளிமையானவனே, கனகசபையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!