திருப்புகழ் : இயலிசையில் உசித
திருத்தலம் : திருச்செந்தூர்
சந்தம்
தனதனன தனன தந்தத் - தனதான
தனதனன தனன தந்தத் - தனதான
வரிகள்
இயலிசையி லுசித வஞ்சிக் - கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் - துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் - கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் - தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் - தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் - தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் - பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் - பெருமாளே.
பதம் பிரித்தது
இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்து அணைவோனே
கயிலைமலை அனைய செந்தில் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.
சொற்கள்
1. இயல் - இலக்கியம்
2. உசித - சிறப்பான
3. அயர்வு - தளர்வு
4. தகர்கல் - ஆடு
5. வனசகுறமகள் - அழகிய குறத்தியாம் வள்ளி
6. வந்தித்து - வணங்கி
7. அனைய - ஒத்து
8. செந்தில் - திருச்செந்தூர்
9. கரிமுகவன் - பிள்ளையார்
பொருளுரை
இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து, இரவும் பகலும் மனது அவர்களையே நினைத்து நான் அலையாமல் இருந்து, உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக் கடலில் மூழ்கி உன்னை நான் எனது உள்ளத்திலே அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக. மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை வாழும் வேடர்களின் அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை வணங்கிப் பின் அணைந்து கொண்டவனே, திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில் திருத்தலத்தில் வாழ்பவனே, யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான கந்தப் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!