திருப்புகழ் : கோடு ஆன மடவார்கள்
திருத்தலம் : திருவருணை
சந்தம்
தானான தனதான - தனதான
வரிகள்
கோடான மடவார்கள் - முலைமீதே
கூர்வேலை யிணையான - விழியூடே
ஊடாடி யவரோடு - முழலாதே
ஊராகத் திகழ்பாத - மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் - வலமாக
நீடோடி மயில்மீது - வருவோனே
சூடான தொருசோதி - மலைமேவு
சோணாடு புகழ்தேவர் - பெருமாளே.
பதம் பிரித்தது
கோடு ஆன மடவார்கள் முலை மீதே
கூர் வேலை இணையான விழி ஊடே
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராகத் திகழ் பாதம்
அருள்வாயே
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது
வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர்
பெருமாளே.
பொருளுரை
விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களிலும், கூரிய வேலுக்குச் சமமான கண்களிலும், ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே, (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக. விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி, மயிலின் மேல் பறந்து வந்தவனே, நெருப்பான ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும், தேவர்களின் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!