திருப்புகழ் : கீத விநோத மெச்சு
திருத்தலம் : திருவருணை
சந்தம்
தான தனான தத்த - தனதான
தான தனான தத்த - தனதான
வரிகள்
கீத விநோத மெச்சு - குரலாலே
கீறு மையார் முடித்த - குழலாலே
நீதி யிலாத ழித்து - முழலாதே
நீமயி லேறி யுற்று - வரவேணும்
சூதமர் சூர ருட்க - பொருசூரா
சோண கிரீயி லுற்ற - குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ - லருள்வோனே
ஆனை முகார்க னிட்ட - பெருமாளே.
பதம் பிரித்தது
கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே
நீதி யிலாதழித்தும் உழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்
சூதமர் சூரர் உட்க பொருசூரா
சோண கிரீயி லுற்ற குமரேசா
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.
பொருளுரை
(மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!