Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : கடல்பரவு தரங்க

திருத்தலம் : திருவருணை

சந்தம்

தனதனன தனந்த தானன - தந்ததான

தனதனன தனந்த தானன - தந்ததான

வரிகள்

கடல்பரவு தரங்க மீதெழு - திங்களாலே

கருதிமிக மடந்தை மார்சொல்வ - தந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய - தென்றலாலே

வயலருணையில் வஞ்சி போதந - லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி - றைஞ்சும்வீரா

எழுகிரிகள் பிளந்து வீழஎ - றிந்தவேலா

அடலசுரர் கலங்கி யோடமு - னிந்தகோவே

அரிபிரம புரந்த ராதியர் - தம்பிரானே.

பதம் பிரித்தது

கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே

கருதிமிக மடந்தை மார்சொல் வதந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே

வயலருணையில் வஞ்சி

போதநலங்கலாமோ

இடமுமையை மணந்த நாதர் இறைஞ்சும்வீரா

எழுகிரிகள் பிளந்து வீழ எறிந்தவேலா

அடலசுரர் கலங்கி யோடமுனிந்தகோவே

அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.

பொருளுரை

கடலில் பரவிவரும் அலைகளின் மீது தோன்றி எழும் நிலாவாலும், நினைத்து நினைத்துப் பெண்கள் தமக்குள் பேசும் வதந்தியாலும், வடவாக்கினியைக் கோபித்து சூடாக வீசும் தென்றல் காற்றாலும், வயல் சூழ்ந்த இந்தத் திருவண்ணாமலையில் உள்ள வஞ்சிக் கொடி போன்ற பெண் (உன்னைப் பிரிந்ததால்) அறிவு மயங்கி, கலங்கி வருந்தலாமோ? இடது பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துள்ள சிவபிரான் வணங்கும் வீரனே, ஏழு மலைகளும் பிளந்து விழும்படியாக செலுத்திய வேலாயுதனே, வலிமை வாய்ந்த அசுரர்கள் கலங்கி ஓடக் கோபித்த தலைவனே, திருமால், பிரம்மா, இந்திராதி தேவர்கள் தம்பிரானே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்