திருப்புகழ் : இரவுபகற் பலகாலும்
திருத்தலம் : திருவருணை
சந்தம்
தனதனனத் தனதான தனதனனத் - தனதான
தனதனனத் தனதான தனதனனத் - தனதான
வரிகள்
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் - தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் - தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் - துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் - பெருமாளே.
பதம் பிரித்தது
இரவு பகல் பலகாலும் இயல் இசை முத்தமிழ் கூறி
திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பர கருணைப் பெருவாழ்வே பர சிவதத்துவ ஞானா
அரன் அருள் சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.
சொற்கள்
1. திரம் - நிலையான பொருள்
2. பர - உயர்ந்த
3. அரன் - சிவபிரான்
4. சற் புதல்வோன் - நற்குணப் பிள்ளை
5. அருணகிரி - திருவண்ணாமலை
பொருளுரை
இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!