திருப்புகழ் : முட்டுப் பட்டு
திருத்தலம் : காஞ்சீபுரம்
சந்தம்
தத்தத் தத்தத் - தனதான
தத்தத் தத்தத் - தனதான
வரிகள்
முட்டுப் பட்டுக் - கதிதோறும்
முற்றச் சுற்றிப் - பலநாளும்
தட்டுப் பட்டுச் - சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் - கருதாதோ
வட்டப் புட்பத் - தலமீதே
வைக்கத் தக்கத் - திருபாதா
கட்டத் தற்றத் - தருள்வோனே
கச்சிச் சொக்கப் - பெருமாளே.
பதம் பிரித்தது
முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப் பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனை
சற்றுப் பற்றக் கருதாதோ
வட்டப் புட்பத் தலமீதே
வைக்கத் தக்கத் திருபாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே
கச்சிச் சொக்கப் பெருமாளே.
பொருளுரை
சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும் முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும் தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ? வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே, துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!