திருப்புகழ் : சந்ததம் பந்த
திருத்தலம் : திருப்பரங்குன்றம்
சந்தம்
தந்தனந் தந்தத் - தனதான
தந்தனந் தந்தத் - தனதான
வரிகள்
சந்ததம் பந்தத் - தொடராலே
சஞ்சலந் துஞ்சித் - திரியாதே
கந்தனென் றென்றுற் - றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் - றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் - புணர்வோனே
சங்கரன் பங்கிற் - சிவைபாலா
செந்திலங் கண்டிக் - கதிர்வேலா
தென்பரங் குன்றிற் - பெருமாளே.
பதம் பிரித்தது
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்று உற்று உனைநாளும்
கண்டு கொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
சொற்கள்
1. சந்ததம் - எப்பொழுதும்
2. பந்தம் - பாசம்
3. சஞ்சலம்- துயரம்
4. துஞ்சி - சோர்ந்து
5. திரிவது - அலைவது
6. தந்தி - தேவவயானை
7. சங்கரன் - சிவபெருமான்
பொருளுரை
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!