திருப்புகழ் : அதிரும் கழல்
திருத்தலம் : குன்றுதோறாடல்
சந்தம்
தனனந் தனன தந்த - தனதான
தனனந் தனன தந்த - தனதான
வரிகள்
அதிருங் கழல்ப ணிந்து - னடியேனுன்
அபயம் புகுவ தென்று - நிலைகாண
இதயந் தனிலி ருந்து - க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க - அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி - நடமாடும்
இறைவன் தனது பங்கி - லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து - விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த - பெருமாளே.
பதம் பிரித்தது
அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் உன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமை பாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.
பொருளுரை
ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!