திருப்புகழ் : நாசர்தங் கடை
திருத்தலம் : சுவாமிமலை
சந்தம்
தானனந் தனதனன தனதனா தத்த தந்த - தனதான
தானனந் தனதனன தனதனா தத்த தந்த - தனதான
வரிகள்
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து - தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி - மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து - சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று - பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற - குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு - மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து - புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த - பெருமாளே.
பதம் பிரித்தது
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமுங் கெட அடைய வழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழின் ஓர் சொற் பகர்ந்து சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபாதத்தை நின்று பணிவேனோ
வாசகம் புகல ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தருதிருவை ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும்
கேசவன் பரவுகுரு மலையில் யோகத்தமர்ந்த பெருமாளே.
பொருளுரை
கேடு செய்யும் கீழ்மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து அதனால் மிகவும் நொந்து போய், தடுமாற்றம் அடைந்து சுய அறிவும் கெட்டுப்போய், முழுவதுமாக தவறான வழியில் விழுந்து, ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி நான் மெலிவுறாமல், இந்தச் சிறந்த உலகமே போற்றும் உனது புகழின் ஒரு சொல்லளவு பகுதியாவது சொல்லி அதனால் சுகமடைந்து, நறுமணம் வீசும் உன் இரண்டு தாமரைப் பாதங்களை மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க மாட்டேனோ? உபதேச மொழியை நீ கூற, ஒப்பற்ற சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருநாதனே, இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின் அம்சமாகும் ஒப்பில்லா தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே, மூங்கில், கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, திருமாலே போற்றிப் புகழும் சுவாமி மலையில் உபதேச குருவாக யோகநிலையில் அமர்ந்த பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!