திருப்புகழ் : காமியத் தழுந்தி
திருத்தலம் : சுவாமிமலை
சந்தம்
தானனத் தனந்த -தனதான
தானனத் தனந்த -தனதான
வரிகள்
காமியத் தழுந்தி - யிளையாதே
காலர்கைப் படிந்து - மடியாதே
ஓமெழுத் திலன்பு - மிகவூறி
ஓவியத் திலந்த - மருள்வாயே
தூமமெய்க் கணிந்த - சுகலீலா
சூரனைக் கடிந்த - கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த - மயில்வீரா
ஏரகத் தமர்ந்த - பெருமாளே.
பதம் பிரித்தது
காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்தி லந்தம் அருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
பொருளுரை
ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலிந்து போகாமல், யம தூதர்களின் கைகளிற் சிக்கி இறந்து போகாமல், ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு, யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய) அருள்வாயாக. வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே, சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே, பொன்மலையைப் போலச் சிறந்த மயிலில் ஏறும் வீரனே, திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!