திருப்புகழ் : வரதா மணி நீ
திருத்தலம் : பழநி
சந்தம்
தனனா தனனா -தனதான
தனனா தனனா -தனதான
வரிகள்
வரதா மணிநீ - யெனவோரில்
வருகா தெதுதா - னதில்வாரா
திரதா திகளால் - நவலோக
மிடவே கரியா - மிதிலேது
சரதா மறையோ - தயன்மாலும்
சகலா கமநூ - லறியாத
பரதே வதையாள் - தருசேயே
பழனா புரிவாழ் - பெருமாளே.
பதம் பிரித்தது
வரதா மணிநீயென ஓரில்
வருகா தெது எதுதான் அதில் வாரா(து)
இரதாதிகளால் நவலோகம்
இடவே கரியாம் இதில் ஏது
சரதா மறையோது அயன்மாலும்
சகலாகமநூல் அறியாத
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே.
பொருளுரை
வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும், கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது? பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் ஒன்பது லோகங்களை இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது? சத்திய சொரூபனே, வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய், பழனிப்பதியில் வாழ்கின்ற பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!