திருப்புகழ் : காரணமதாக
திருத்தலம் : பழமுதிர்ச்சோலை
சந்தம்
தானதன தான தந்த - தனதான
வரிகள்
காரணம தாக வந்து - புவிமீதே
காலனணு காதி சைந்து - கதிகாண
நாரணனும் வேதன் முன்பு - தெரியாத
ஞானநட மேபு ரிந்து - வருவாயே
ஆரமுத மான தந்தி - மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு - விழியோனே
சூரர்கிளை மாள வென்ற - கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற - பெருமாளே.
பதம் பிரித்தது
காரணமதாக வந்து புவிமீதே
காலனணுகாது இசைந்து கதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநடமே புரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு விழியோனே
சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.
பொருளுரை
ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து, காலன் என்னை நெருங்காதபடிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வருவாயாக. நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே, ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே, சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே, பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!